CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-31

தெலுங்கு படத்தில் நடிக்க தமிழ் நடிகருக்கு தடை


சூட்டிங்கிற்கு டிமிக்கி கொடுத்த தமிழ் நடிகருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்லம்... ஐ லவ் யூ... என்று யாராவது சொன்னால்... நடிகர் பிரகாஷ் ராஜ்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு கேரக்டருடன் ஒன்றி நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்...! என்ற பழமொழியை நன்கு உணர்ந்திருக்கிற பிரகாஷ் ராஜுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஏக கிராக்கி. அவரது நடிப்பை இந்த மும்மொழி திரை ரசிகர்களும் ரசிக்கிறார்கள்.

இதனால் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பிஸியாக இருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஒரே நேரத்தில் இப்படி பல படங்களில் நடித்து வருகிறீர்களே... குழப்பமாக இருக்காதா? என்று முன்பொரு முறை நான் பிரகாஷ் ராஜிடம் கேட்டேன். அதற்கு அவர், கால்ஷீட்களை ஒதுக்குவதில் குழப்பம் இல்லையென்றால் நடித்து கொடுப்பதிலும் குழப்பம் இருக்காது என்று பதிலளித்தார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கால்ஷீட் பிரச்னையில் சிக்கியுள்ளார். அவர் சொன்ன தேதியில் சரியாக படப்பிடிப்புக்கு செல்வதில்லை என்று பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சிலில், கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் செய்தன. இதையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீண்டும் பிரகாஷ்ராஜ் மீது அதே புகார் எழுந்தது.

இதையடுத்து தெலுங்கு தயாரிப்பு கவுன்சில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை அணுக வேண்டாம். என்று கூறப்பட்டுள்ளது.

கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே நடிப்புக்கு தடை போட்டபோது பிரகாஷ்ராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற வதந்தியை பரப்பி, பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார். இந்த முறை என்ன செய்யப்போகிறாரோ?

(தமிழ் சினிமா நிருபர் குழுவின் சினிமா செய்தி சேவை குறித்து உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!)

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!